இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பகலிரவு ஆட்டமாக தொடங்குகிறது.
டெஸ்ட் தொடர் வெற்றி, டி20 தொடர் வெற்றி என அதீத உற்சாகத்தில் களமிறங்கும் இந்திய அணி முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடப்போவது யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. எனினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மீண்டும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய நிலையில் இன்றையப் போட்டியில் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது .2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விராட்கோலி சதம் எதுவும் அடிக்கவில்லை. அதேபோல ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
அதேபோல "அவுட் ஆஃப் பார்மில்" இருக்கும் கேஎல் ராகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், நடராஜன் சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா உள்ளிட்ட சிறந்த வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டியில் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் பேட்டிங் சுமாராகவே இருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், ராய், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோரை பேட்டிங்கிலும் பெரிதும் நம்பியிருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சில் மார்க்வுட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புனே நகரின் மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இந்தப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.