இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முற்றிலும் மழையால் ரத்து ஆனது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து, மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. குக்(21), ஜென்னிங்ஸ்(11), ரூட்(19), போப்(28), பட்லர் (24) என சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடியதோடு, சீரான வேகத்தில் ரன்களையும் குவித்தது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதனால், அதிகபட்சம் 200 ரன்களை எட்டும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. பெர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பெர்ஸ்டோவ் 76 பந்துகளிலும், வோக்ஸ் 71 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் ஒரு ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் இந்திய பந்து வீச்சுகளை சிதறடித்தனர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அவ்வளவும் எளிதில் முறியடிக்கவில்லை.
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெர்ஸ்டோவ் 93 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்திய அணி 107 ரன்னில் சுருண்ட நிலையில், இங்கிலாந்து 250 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.