விளையாட்டு

2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார்: நெஹ்ரா நம்பிக்கை

2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார்: நெஹ்ரா நம்பிக்கை

rajakannan

2020 டி20 உலகக்கோப்பை வரை தோனியால் விளையாட முடியும் என்றும், குடும்பத்தில் ஒரு மூத்தவர் போல், அணிக்கு தோனியின் பங்களிப்பு தேவை என்றும் ஆஷிஸ் நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 18 வருடங்கள் விளையாடிய ஆஷிஸ் நெஹ்ரா, டெல்லியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.  நியூசிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தோனி மிகவும் நிதானமாக ஆடினார். அவரால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கமுடியவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலிக்கு, தோனி ஒத்துழைப்பு அளித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இளைஞர்களுக்கு தோனி வாய்ப்பு அளித்து ஓய்வு பெற வேண்டும் என்று அகர்கர், லஷ்மண் உள்ளிட்ட வீரர்கள் கூறினர். 

ஆனால், இந்திய அணியின் தோல்விக்கு தோனியை மட்டும் எப்படி குறை கூற முடியும் என்று அவருக்கு ஆதரவாக கேப்டன் கோலி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனியால் விளையாட முடியும் என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இது குறித்து நெஹ்ரா கூறுகையில், “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மூத்தவர் தேவைப்படுகிறார். அந்தப்பணியை தோனி செய்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கிரிக்கெட்டில் எல்லா நேரங்களிலும் திறமையை வெளிப்படுத்துவது சிரமம். நான், கேப்டனாகவோ, பயிற்சியாளராகவோ இருந்தால் தோனி விளையாட வேண்டும் என்று தான் சொல்வேன்” என்றார்.