சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு கலகலப்பை ஏற்படுத்துவார். கடந்த முறை சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துக்கூடாது என்று போராட்டங்கள் வலுத்த நிலையில், ''சென்னை அணி ரசிகர்கள் நிச்சயம் எங்களுக்கு அவர்களது ஆதரவால் உற்சாகமூட்டுவார்கள் என்று நம்புகிறேன். இது அன்பால் சேர்ந்தக் கூட்டம். அழிக்க முடியாது. எடுடா வண்டிய.. போடுடா விசில்” என ட்வீட்டை பதிவிட்டு ஆச்சரியமூட்டினார்.
பந்துவீச்சில் விக்கெட்டை எடுத்துவிட்டு மைதானத்தையே ஒரு சுற்று ஓடி வரும் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என சென்னை ரசிகர்கள் செல்லப்பெயரும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் நேற்று வெளியிட்டது. ஐபிஎல் அறிவிப்பால் குஷி அடைந்த இம்ரான் தாஹிர், ''என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23ம் தேதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில'' என கலகலப்பாக ட்வீட் செய்துள்ளார்.
அவரின் ட்வீட்டுக்கு பதில் அளித்து சென்னை சூப்பர் கிங்ஸ், ''நலம், நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது? தெற்கு ஆப்ரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும்போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்'' என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளது.
முதல் 17 போட்டிகளை மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.