விளையாட்டு

“அடுத்த சீசனில் தோனி விளையாடலனா நானும் விளையாடல..” - வைரலாகும் ரெய்னாவின் பழைய பேட்டி

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்னத் தல’ என போற்றப்படுபவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. தோனி படையின் தளபதி. சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் இவருக்கு மிகவும் நெருக்கமான பிணைப்பு உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்ற நாளன்று தனது ஓய்வையும் அறிவித்தவர் ரெய்னா. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட ரெய்னாவை எந்தவொரு அணியும் 2022 சீசனுக்கான ஏலத்தில் வாங்கவில்லை. இந்த நிலையில் அவரது பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பேட்டியை அவர் 2021 சீசனின் போது நியூஸ் 24 ஸ்போர்ட்ஸுக்கு கொடுத்துள்ளார். 

“அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாட மாட்டேன். நாங்கள் இருவரும் 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறோம். இந்த 2021 சீசனை நாங்கள் வென்றால் அடுத்த சீசனிலும் விளையாடுமாறு தோனியிடம் நான் சொல்வேன்” என தெரிவித்துள்ளார் ரெய்னா. 

இருந்தாலும் இந்த முறை தனது தளபதி இல்லாமல் ஐபிஎல் களத்தில் களம் காண உள்ளார் தோனி. மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை எடுத்துள்ளார் ரெய்னா. ஐபிஎல் அரங்கில் ஆல்-டைம் டாப் ஸ்கோரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார் அவர். 

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்.. https://twitter.com/CoverDrive001/status/1492884881839652867