விளையாட்டு

அந்த தீவிரம் போயிடுச்சுன்னா அவ்வளவுதான்: விராத் கோலி பேட்டி!

அந்த தீவிரம் போயிடுச்சுன்னா அவ்வளவுதான்: விராத் கோலி பேட்டி!

webteam

'தீவிரமாக விளையாட்டை எதிர்கொள்பவன் நான். அது போய்விடக்கூடாது என்பதற்காக அதிக பயிற்சி எடுத்துவருகிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

தென்னாப்பிரிக்காவுடனான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராத் கோலி 160 ரன்கள் குவித்தார். 

வெற்றிக்குப் பின் விராத் கோலி கூறியதாவது:

இந்தப் போட்டியிலும் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பந்தில் நல்ல வேகமும், பவுன்சும் இருந்தது. 330 ரன்கள் வரை எடுக்கலாம் என நினைத்தோம். ஆனால், 30-வது ஓவருக்குப் பிறகு மாறிவிட்டது. அதனால், 280-290 ரன்கள் என இலக்கை மாற்றினோம்.   ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று ஆட வேண்டும். அப்போதுதான் ரன்களை குவிக்க முடியும். ஒரு கேப்டனாக கடைசி வரை நின்று பேட்டிங் செய்தது அற்புதமாக இருந்தது. தவான், புவனேஷ்வர்குமார் பார்ட்னர்ஷிப்பும் கைகொடுத்தது. அடுத்த போட்டிதான் முக்கியம். ஒரு நாள் போட்டித் தொடரை இழந்துவிடக் கூடாது என்ற தீவிரத்தில் இருக்கிறோம். அவர்களும் அதை முறியடிக்க பலவித முயற்சிகளோடு வருவார்கள் என்று தெரியும். அவர்களுக்கு கதவை அடைக்கவேண்டும்.

நான், இந்த வருடம் 30 வயதை தொடப் போகிறேன். பிட்னஸ் சரியாக இருந்தால்தான் விளையாட்டை, வயதானாலும் தொடர முடியும். இதே போன்ற கிரிக்கெட்டை எனது 34-35 வயதில் கூட விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகக் கடும் பயிற்சி பெறுகிறேன். ஏனென்றால் நான் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட விரும்புபவன். அந்த தீவிரம் போய்விட்டால், நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அந்த தீவிரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறேன். அதற்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயிற்சி செய்கிறேன். அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் முக்கியம். அது பற்றி சிந்தித்து முடிவெடுத்தால், அற்புதமான விஷயங்கள் நடக்கும். 
இவ்வாறு விராத் கோலி கூறினார்.