விளையாட்டு

மழையால் உத்வேகம் குறைந்துவிட்டது: கலீல் அகமது

webteam

இரண்டாவது டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் எங்கள் உத்வேகம் குறைந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல் பட்டது. ஆனால், மழையால் போட்டி கைவிடப்பட்டது. இன்று மூன்றாவது போட்டி நடக்கிறது. 

இந்த தொடரில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, முதல் போட்டியில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

அவர் கூறும்போது, ‘புதிய பந்துகளில் என்னால் நன்றாக ஸ்விங் பண்ண முடியும். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தினேன். இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். மழை வந்து கெடுத்துவிட்டது. அதனால் எங்கள் உத்வேகமும் குறைந்துவிட்டது. ஏமாற்றமாகிவிட்டது.

இன்று மூன்றாவது போட்டி நடக்கிறது. தொடரை சமன் செய்ய நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். ஒவ்வொரு முறை பந்துவீசும்போதும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். விக்கெட் கிடைத்ததும் குஷியாகி விடுகிறேன். இதுபோன்ற போட்டிகளின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கிறது. புவனேஷ்வர்குமார், டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர் என மூன்றிலும் பந்துவீசி வருகிறார். அவரிடம் நிறைய கற்க முடிகிறது’ என்றார்