விளையாட்டு

வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை!

வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது என் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை!

rajakannan

போட்டி வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை, அது தானாக வரும் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல், புதுமுக வீரர்களாக யுஷ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அஸ்வின் கூறுகையில், “ஒருநாள் வாய்ப்பு வந்து என் கதவை தட்டும் என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் அதிக அளவில் தவறுகள் செய்யவில்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது, களத்தில் எனது திறமையை முழுதாக வெளிப்படுத்துவேன்” என்றார்.

மேலும், “முடிவு எடுக்கும் இடத்தில் நான் தற்போது இல்லை. கூட்டத்திற்காக நான் ஒருபோதும் விளையாடுவதில்லை. 5-ம் தர போட்டிகளில் விளையாடினாலும் மகிழ்ச்சியாக செயல்படுவேன். எப்பொழுதும் விளையாடவே நான் விரும்புகிறேன். அணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு பார்வை இருக்கும். அதேபோல், தற்போதைய கேப்டனுக்கும் ஒரு பார்வை உள்ளது. அதனை மதிக்க வேண்டும். நான் கேப்டானாக இருந்தாலும் அதைதான் எதிர்பார்ப்பேன்” என்றார்.

2010-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின், 111 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.