சி.எஸ்.கே. அணியில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறியாகியுள்ளன. தொடருக்கான பயிற்சி தொடங்கும் முன்னரே பிசிசிஐ பெரும் சவாலை சந்தித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பயிற்சி முகாம் நடத்திய ஒரே ஐபிஎல் அணி சிஎஸ்கே தான். அதுவும், கொரோனா பாதிப்புகள் விண்ணை தொடும் நகரங்களில் ஒன்றான சென்னையில் பயிற்சிக் களம் அமைத்தது தோனியின் படை. அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி வீரர்கள் கட்டியணைப்பதையும் காண முடிந்தது.
ஐந்து நாள்கள் பயிற்சிக்குப் பின் தனி விமானம் மூலம் துபாய் செல்வதற்கு முன்னதாக அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றில், வீரர்கள் உள்ளிட்ட அணியினருக்கு நெகட்டிவ் முடிவுகளே வந்தன. துபாயை அடைந்தவுடன் சென்னை அணியினரை வரவேற்றவர் வீரர்களை கட்டித் தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலை தொடங்கிய அணியினருக்கு முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் நாட்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில், மூன்றாம் பரிசோதனையின் முடிவில் உதவியாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொரோனா பரவியது தெரியவந்ததாக அணி நிர்வாகம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ வகுத்த முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே கடந்து வந்த பாதையில் சூதாட்ட புகார்கள் தொடங்கி தடைகள் ஏராளம். கொரோனாவில் இருந்து சிஎஸ்கே அணியினர் மீண்டு விரைவில் பயிற்சியைத் தொடங்கி ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக முடிக்கும் தருணத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.