விளையாட்டு

"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் ரிஷப் பன்ட்" - தினேஷ் கார்த்திக்

"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் ரிஷப் பன்ட்" - தினேஷ் கார்த்திக்

jagadeesh

இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் ரிஷப் பன்ட் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

'ஸ்போர்ட்ஸ் டுடே' ஊடகத்துக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக் "கடந்த சில மாதங்களாக மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரிஷப் பன்ட். அதைவிட அவர் சில இக்கட்டான போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றியிருக்கிறார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக இருந்தாலும் ஐபிஎல் இறுதியாக இருந்தாலும் அவரின் ஆட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும் அவருக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன், அதுதான் அவர் தொடர்ந்து செயல்பட உறுதுனையாக இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "2 ஆண்டுக்கு முன்பு நடந்த ஐபிஎல்லில் எலிமினேட்டர் சுற்றில் தனியாளாக நின்று டெல்லிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். இது போல பல நெருக்கடியான ஆட்டங்களில் ரன்களை சேர்த்திருக்கிறார். இது அவருடைய மன நிலையை பிரதிபலிக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் நிச்சயமாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்" என்றார் தினேஷ் கார்த்திக்.

இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் இப்போது வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இரண்டு வர்ணனையாளர்கள் மட்டுமே இங்கிலாந்து சென்றுள்ளனர். அதில் ஒருவர் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும், இந்நாள் வீரர் தினேஷ் கார்த்திக் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.