ஹர்பஜன் சிங்கிற்கு கேல் ரத்னா விருது வழங்க வலியுறுத்திய ஆவணங்கள் தாமதமாக மத்திய அரசுக்கு சென்றது குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதிற்காக ஹர்பஜன் சிங் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், பரிந்துரைக்கான ஆவணங்களை தாமதமாக வந்தடைந்ததாக கூறி மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது. இது, ஹர்பஜன் சிங்கை வருத்தமடைய செய்துள்ளது.
இதனையடுத்து, ஆவணங்கள் தாமதமான விவகாரத்தில் தலையிடுமாறு பஞ்சாப் மாநில விளையாடுத்துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் கோரிக்கையை ஏற்று கேல் ரத்னா விருது வழங்க வலியுறுத்திய ஆவணங்கள் தாமதமானது குறித்து விசாரணை மேற்கொள்ள அமைச்சர் ராணா குர்மித் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஹர்பஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு உருக்கமான வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில், “கேல் ரத்னா விருது பரிந்துரைக்கான ஆவணங்களை பஞ்சாப் அரசு தாமதமாக அனுப்பியதால் மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். அதனால், இந்த வருடம் விருதுக்கான பரிந்துரையில் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை.
மார்ச் 20ஆம் தேதியே உங்கள் அலுவலகத்திற்கு ஆவணங்களை நான் சமர்பித்துவிட்டேன். அந்த ஆவணங்கள் 10-15 நாட்களில் டெல்லிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், உரிய நேரத்திற்கு ஆவணங்கள் சென்றடையவில்லை. உரிய நேரத்தில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த வருடம் எனக்கு விருது கிடைத்திருக்கும். எனக்கு விருது கிடைத்திருந்தால் மற்ற வீரர்களுக்கும் அது ஊக்கமாக இருந்திருக்கும்.
இதுபோல், தாமதங்கள் ஏற்பட்டால் வீரர்களுக்கு சிக்கல் ஏற்படும். இந்த வருடம் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், என்னுடைய பெயரை அடுத்த வருடம் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்து ஹர்பஜன் இருந்தார்.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா விருது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் இந்த விருந்து 1991ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதே செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு வழங்கப்பட்டது. கிரிக்கெட் துறையை பொறுத்தவரையில் சச்சின் (1997-98), தோனி (2007), விராட் கோலி (2018) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.