விளையாட்டு

“நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என புரியவில்லை” - ஹர்பஜன் சிங்

webteam

நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது. 

சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த ஐபிஎல் போட்டியில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டுக்கள். நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் மற்றொரு ட்வீட்டில்,  “தமிழ் மக்கள் மற்றும் சென்னை ஐபிஎல் ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.