விளையாட்டு

''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு

webteam

தனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக தடகள வீராங்கனை துத்தி சந்த் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரிலேயே சில வருடங்களக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை வெளியிட்ட பிறகு துத்தி சந்துக்கு அவரது சகோதரி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய துத்தி சந்த், தன்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தன் சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தன்னை வீட்டை விட்டே வெளியேற்றுவே என்றும் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துத்தி சந்த், தனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கூறிய அவர், ''பணம் கேட்டு சகோதரி தன்னை தாக்கினார். நான் குடும்பத்தினரை கவனிக்க மாட்டேன் என நினைக்கிறார்கள். எனது பெற்றோருக்கும், குடும்பத்துக்கும் நான் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று எனக்கு தெரியும். எனது குடும்பத்துக்காக நான் உதவிகளை நிச்சயம் செய்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

துத்தி சந்தை யாரோ பின்னிருந்து இயக்குவதாகவும் , அவரிடம் உள்ள பணத்துக்காக அவரை தவறாக வழிநடத்துவதாகவும் துத்தி சந்தின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.