விளையாட்டு

அம்லா சதம் வீண்: வென்றது குஜராத்

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதின.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஆம்லா, ஐபிஎல் கிரிக்கெட்டில் தமது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் 58 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மேக்ஸ்வெல் ‌ஆட்டமிழக்காமல், 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய குஜராத் அணிக்கு டுவைன் ஸ்மித், இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். கேப்டன் சுரேஷ் ரெய்னா 39 ரன்களும், தினேஷ் கார்த்திக் 35 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். 4 விக்கெட்களை மட்டுமே இழந்த குஜராத் அணி, 2 பந்துகளில் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை ‌எட்டியது. ஆறாவது தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.