விளையாட்டு

மேக்ஸ்வெல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு வைத்த பெங்களூர் அணி

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

அந்த அணிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களம் இறங்கினர். முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தனர் அவர்கள் இருவரும். பத்தாவது ஓவரின் நான்காவது பந்தில் கோலியும், அடுத்த பந்தில் டேன் கிறிஸ்டியனும் அவுட்டாகி வெளியேறினர். பஞ்சாப் அணியின் ஹென்ரிக்ஸ் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார். படிக்கல் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

மெல்லமாக இன்னிங்ஸை பஞ்சாப் அணி வீரர்கள் தங்கள் பக்கமாக திருப்ப முயன்ற போது மேக்ஸ்வெல் அதனை தகர்த்தார். நடப்பு சீசனில் தனது ஐந்தாவது அரை சதத்தை பதிவு செய்தார் மேக்ஸ்வெல். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது பெங்களூர். பஞ்சாப் அணியின் பவுலர் முகமது ஷமி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் விரட்டுகிறது.