சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் நிகழ்த்தும் வாய்ப்பு தள்ளிப் போயுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய இவர், இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் இவர் பல சாதனைகளை வைத்துள்ளார்.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூன்றாவது போட்டியில் கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சிக்சர்களும் அடங்கும். அந்த சிக்சர்ஸ்கள் மூலம் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் (476) அடித்த ஷாகித் அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார்.
பங்களாதேஷ் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் மேலும் சில சிக்சர்களை விளாசினால் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்து முன்னேறி செல்வார் என்று கருதப்பட்டது. ஆனால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தப் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது, சர்வதேசப் போட்டியில் அதிக சிக்சர் சாதனை தள்ளிப்போகிறது.
இதுபற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வுக் குழு தலைவர் கர்ட்னி புரவுன் கூறும்போது, ’கிறிஸ் கெய்லுக்கு ஓய்வளித்திருக்கிறோம். அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் கோட்ரல் சேர்க்கப்பட்டுள்ளார்’ என்றார்.