விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கிரெஜ்சிகோவா

jagadeesh

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு பார்போரா கிரெஜ்சிகோவா தகுதிப்பெற்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா மற்றும் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி ஆகியோர் மோதினர். போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் கடும் சவாலாக விளங்கினர். இதில் முதல் செட்டில் 5-5 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது. அதன்பின், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார்.

இதனால் வெகுண்டெழுந்த சக்காரி இரண்டாவது செட்டை அதிரடியாக ஆடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடுமையாக மோதினர். ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி விறுவிறுப்பு ஏற்படுத்தியது. ஆனாலும், கிரெஜ்சிகோவா கடும் போராட்டத்துக்கு பிறகு 3வது செட்டை தன்வசப்படுத்தினார். இறுதியில், கிரெஜ்சிகோவா 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பிரெஞச் ஓபன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா ஆகியோர் மோதுகின்றனர்.