விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க வாய்ப்பில்லை?  

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க வாய்ப்பில்லை?  

webteam
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஏப்ரல் 15 வரை ஐபிஎல்லில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 97 நாடுகளில் பரவியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தற்போது கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. 
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்-க்காக இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் விசா கட்டுப்பாட்டால், ஏப்ரல் 15 வரை வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.