afa, fbi ani, x page
கால்பந்து

நேற்று வெற்றி சர்ச்சை.. இன்று பணமோசடி.. களத்தில் குதித்த US.. தொடர் நெருக்கடியில் அர்ஜென்டினா!

இப்போட்டியின் நடுவர் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த எகிப்து கால்பந்து சம்மேளனம், நடுவரை நீக்கக் கோரி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

Prakash J

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிக்கு மத்தியில், அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) மீது அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) விசாரணையைத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ரவுண்ட்ஸ் 16 சுற்றில் எகிப்து அணியை, அர்ஜென்டினா அணி சந்தித்தது. இப்போட்டியில் எகிப்து அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றது. எனினும், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நடுவர்களின் சில முடிவுகள் மற்றும் VAR (Video Assistant Referee) மறுஆய்வுகள் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

லியோனல் மெஸ்ஸி மற்றும் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோரின் கோல்களால் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியின் நடுவர் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த எகிப்து கால்பந்து சம்மேளனம், நடுவரை நீக்கக் கோரி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

இந்த சர்ச்சை வெற்றிக்கு அடுத்தபடியாக, அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் மற்றும் அதன் தலைவர் கிளாடியோ டாப்பியா (Claudio Tapia) மீது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நீதித்துறை ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம், அமெரிக்க வங்கிகள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைக் கையாண்டதில் பணமோசடி மற்றும் வங்கி மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

FBI

புளோரிடாவை தளமாகக் கொண்டு, சம்மேளனத்தின் சர்வதேச ஒப்பந்த நிதிகளை நிர்வகித்த TourProdEnter LLC என்ற நிறுவனத்தின் வழியாகச் சுமார் 300 மில்லியன் டாலர் நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றது தொடர்பாக எஃப்பிஐ அமைப்பினர்விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ டாப்பியா ஏற்கெனவே உள்நாட்டில் வரி ஏய்ப்புப் புகார்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி அடுத்தடுத்த சுற்றுகளை நோக்கி முன்னேறி வரும் வேளையில், வெற்றி குறித்த நடுவர் சர்ச்சையும், நிதி மோசடி விவகாரமும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.