கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாகப் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும், அர்ஜென்டினாவுக்கு இது ஏழாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். இதன் மூலம் அவர்கள் தங்களின் நான்காவது பட்டத்தை வெல்லவும், தொடர்ச்சியாக இரண்டு இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது நாடு என்ற பெருமையை இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசில் (1958, 1962) ஆகிய நாடுகளுக்குப் பிறகு பெறவும் காத்திருக்கிறது. மறுபுறம், தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.