இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா சாதனை சதம் அடித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 35 பந்துகளில் சதம்அடித்தார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் சாதனையை ரோகித் சமன் செய்தார்.
- டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது. இதற்கு முன் 2015-ல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 106 ரன் குவித்திருந்தார்.
- டி20 போட்டியில் அதிக சதமடித்தவர்களான (இரண்டுதான்) வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ், நியூசிலாந்தின் முன்றோ, மெக்கல்லம் ஆகியோருடன் இணைந்திருக்கிறார் ரோகித்.
- நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 10 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் யுவராஜ் சிங் அடித்த 7 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் ரோகித்.
- ரோகித் சர்மா எடுத்த 118 ரன்களே, சர்வதேச டி20 போட்டியில் இந்தியர் எடுத்த அதிகப்பட்ச ரன்.
- இந்த வருடம் ரோகித் சர்மா, மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 64 சிக்சர்கள் அடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர் இது.
இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரோகித் சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சுரேஷ் ரெய்னா, ரஸல் அர்னால்ட், அஸ்வின், மேக்லஹன், சஞ்சய் மஞ்சரேக்கர், விவிஎஸ். லக்ஷமண், ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்ளே மற்றும் ஏராளமான ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி ட்விட் செய்துள்ளனர்.