விளையாட்டு

``பதட்டமான சூழ்நிலையில் ஐபிஎல் அனுபவம் தான் உதவியது”- சாம் கர்ரன் பெருமிதம்!

Rishan Vengai

2022 டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதைப்பெற்ற சாம் கர்ரன், “அழுத்தமான சூழ்நிலைகளில் பதட்டமாக இருப்பதை தவிர்க்க எனக்கு ஐபிஎல் அனுபவம் உதவியது” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமை டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம் கர்ரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் அற்புதமான ஆட்டத்தால் வெற்றிபெற்று, 2010க்கு பிறகு 12 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் கோப்பையை வென்றதற்கு பிறகு பேசிய தொடர் நாயகன் சாம் கர்ரன், ஐபிஎல் தொடரில் பங்குபெற்று விளையாடிய அனுபவம் தனக்கு கடினமான நேரங்களிலும், இறுக்கமான இடங்களிலும் பெரிதும் உதவியாக இருந்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பேசியிருக்கும் சாம் கர்ரன், "நான் அங்கு எனது நேரத்தை நேசித்தேன். அதிக அனுபவுள்ள வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் எப்போதும் கற்றுக்கொண்டு மேம்படுத்த முயற்சிக்கிறேன். யாருக்குத் தெரியும், நான் மீண்டும் ஐபிஎலில் பங்குபெற்று ஆடினாலும் ஆடுவேன்" என்று கூறினார்.

மேலும், "மெல்போர்ன் ஆடுகளம், ஒரு நல்ல ஆடுகளமாக இருந்தது. அதனால் இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்குமே பேட்டிங் சவாலாக இருந்தது. சவாலான போட்டியில் பெற்ற வெற்றியில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்தார்.

இறுதிப்போட்டியில் தனது மேட்ச் வின்னிங் ஸ்பெல்லுக்காக சான் கர்ரன்  `ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன்’ விருதைப் பெற்றார். இந்த டி20 உலகக்கோப்பையில் அவர் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அவர் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை பெற்றதும் அடங்கும்.