விளையாட்டு

"அஸ்வின், ஜடேஜா இருவரும் அணியில் இடம் பெற வேண்டும்" - சுனில் கவாஸ்கர்

"அஸ்வின், ஜடேஜா இருவரும் அணியில் இடம் பெற வேண்டும்" - சுனில் கவாஸ்கர்

jagadeesh

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை ஏற்கெனவே இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துவிட்டன. இந்நிலையில் போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யாரெல்லாம் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய சுனில் கவாஸ்கர் "கடந்த சில நாள்களாக சவுத்தாம்டனில் வெயில் விளாசிக்கொண்டு இருக்கிறது. அதனால் பிட்ச் நிச்சயமாக வேகமாக காய்ந்து வருகிறது. அதனால் சழற்பந்துவீச்சு நன்றாகவே எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். பந்து வீச்சு மட்டுமல்லாமல் அஸ்வினும், ஜடேஜாவும் அணியின் பேட்டிங் வரிசையையும் வலுவாக்குவார்கள். அவர்களை சேர்க்கும்பட்சத்தில் அணி முழுமையானதாக இருக்கும்" என்றார்.

மேலும் பேசிய சுனில் கவாஸ்கர் "பயிற்சி போட்டிகள் இல்லாத சூழலில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடியது நல்ல விஷயம். இப்போதிருக்கும் இந்திய அணி அனுபவுமும், இளமையும் கொண்ட கலவையாக இருக்கிறது" என்றார் அவர்.