விளையாட்டு

‘சிக்ஸர் மழை’ பொழிந்த இயான் மார்கன் - 397 ரன்கள் குவித்த இங்கிலாந்து

webteam

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பேரிஸ்டோவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வின்ஸ் 26 (31) ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பேரிஸ்டோவ் மற்றும் ரூட் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

90 (99) ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து பேரிஸ்டோவ் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் வந்த இங்கிலாந்து கேப்டன் மார்கன், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பொழிந்த சிக்ஸர் மழையால் அரங்கமே அதிர்ந்தது. 57 பந்துகளில் மின்னல் வேகத்தில் சதத்தை கடந்தார் மார்கான். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 350 ரன்களை கடந்தது. 4 பவுடண்டரிகள், 17 சிக்ஸர்கள் என 71 பந்துகளில் 148 ரன்களை விளாசி அவுட் ஆகினார் மார்கன். 

இதற்கிடையே ரூட் 88 (82) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் மொயின் அலி 8 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் நைப் மற்றும் ஸத்ரான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.