விளையாட்டு

337 ரன்கள் குவித்த இங்கிலாந்து : இலக்கை எட்டுமா இந்தியா ?

webteam

இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 38வது லீக் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். அதிரடி காட்டிய இருவரும் அரை சதத்தை கடந்தனர். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 160 ரன்கள் இருக்கும் இருக்கும்போது, 66 (57) ரன்களில் ஜாசன் ராய் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ் சதம் விளாசினார். 

111 (109) ரன்கள் எடுத்திருந்த போது பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்கிலாந்து கேப்டன் மார்கன் 1 (9) ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து ரூட் 44 (54) ரன்களில் அவுட் ஆக, அடுத்த வந்த பட்லர் 8 பந்துகளில் 20 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கிடையே களமிறங்கி இறுதி ஓவர் வரை விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 79 (54) குவித்து அவுட் ஆகினார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.