விளையாட்டு

சரிந்த அணியை சேவாக் போல் அதிரடி சதம் விளாசி மீட்ட ரிஷப்! மிரண்டு போன இங்கிலாந்து

ச. முத்துகிருஷ்ணன்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ரிஷப் பண்ட் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினார்.

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பர்மிங்காமில் நிலவிய மேகமூட்டமான நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸில் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரே ஆட்டம் கண்டது.

சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும், விஹாரி 20 ரன்களிலும் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் மேட்டியில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்ப 98 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தள்ளாடத் துவங்கியது.

சரிவில் இருந்து அணியை மீட்கும் பணியில் இறங்கியது ஜடேஜா- பண்ட் இணை. ஜடேஜா நிதான ஆட்டத்தை கையிலெடுக்க, ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தின் பக்கம் திரும்ப ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. 51 பந்துகளில் அரைசதம் விளாசிய பண்ட், 89 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் ஐந்தாவது சதம் இதுவாகும். அவர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். மறுபக்கம் ஜடேஜாவும் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

சதம் கடந்தது ரிஷப் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார். லீச்சின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால், 63.1 ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. ரிஷப் 138 (105), ஜடேஜா 6 (131) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.