விளையாட்டு

இலங்கையிலே 10 மாதம் காத்திருந்த இங்கி. ரசிகர் - கிரிக்கெட் போட்டியை காண முடியாத பரிதாபம்

EllusamyKarthik

இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை பார்க்க 10 மாதம் காத்திருந்த இங்கிலாந்து ரசிகரை வெளியேற்றியது இலங்கை போலீஸ்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன்  இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே மைதானத்தில் இன்று ஆரம்பமானது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் 2020இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் தள்ளிப்போனதால் இப்போது தான் நடைபெறுகிறது. தன் நாட்டின் அணி இலங்கையில் விளையாடுவதை பார்ப்பதற்காக இங்கிலாந்தில் இருந்த கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் செய்து வந்துள்ளார் ராப் லீவிஸ். 

கொரோனா தொடரை தள்ளிப்போட இங்கிலாந்து அணி இலங்கைக்கு வரும் வரை இலங்கையிலேயே இருக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். நாட்கள் கடந்தன. பத்து மாத காத்திருப்புக்கு பின்னர் இங்கிலாந்து அணி இலங்கைக்கு வந்தது. 

ராப் லீவிஸும் முதல் போட்டியை காணும் ஆர்வத்தில் இருந்துள்ளார். இருப்பினும் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை இலங்கை அரசு. அதனால் காலே போட்டியை மைதானத்திற்கு பக்கத்தில் காலே கோட்டையிலிருந்து பார்க்க ராப் முடிவு செய்துள்ளார். அதன்படி கோட்டையின் கோபுரத்தில் ஏறி அவர் போட்டியை பார்க்க ஆயத்தமாகியுள்ளார்.

இரு அணிகளும் தேசிய கீதம் பாடிய நிலையில் ராப் லீவிஸை கோட்டையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் இலங்கை போலீசார். இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு போட்டியை நான் நிச்சயம் பார்ப்பேன் என சொல்லியுள்ளார் ராப். அவரது பத்து மாத காத்திருப்பு போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே கலைந்துள்ளது. 

அந்த கோட்டையிலிருந்து பத்திரிகையாளர்கள் போட்டியை பாத்ததாகவும் சொல்லப்படுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 46.1 ஓவரில் 135 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 41 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை குவித்துள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இலங்கையை விட 8 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.