இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நடந்து வந்தது. கடைசி மற்றும் 5-வது டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. மழை காரணமாக போட்டி தடைபட்டதால், 11 ஓவராகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. மார்டின் குப்தில் 20 பந்துகளில் அரைசதமும் முன்றோ 21 பந்துகளில் 46 ரன்களும் சீஃபர்ட் 16 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்ததால் போட்டி, சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்துடன் சமன் செய்திருந்த நியூசிலாந்து அணி, சூப்பர் ஓவரில் கோப்பையை நழுவவிட்டது. அதற்குப் பழி வாங்கும் விதமாக இந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால், சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது.