விளையாட்டு

விராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி!

விராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி!

webteam

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 97, ரஹானே 81 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 161 ரன்களில் சுருண்டது. ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டை அள்ளினார்.

இதையடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், கேப்டன் விராத் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 

கோலியும், புஜாராவும் நிதானமாக ஆடினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து பவுலர்களால் இவர்களை பிரிக்க முடியவில்லை. ஸ்கோர் 224 ரன்களாக இருந்தபோது, புஜாரா 72 ரன்களில் பென் ஸ்டோக்சின் பந்துவீச்சில் குக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய விராத் கோலி தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். 

முதல் இன்னிங்சில் 97 ரன்களில் ஆட்டம் இழந்த விராத் கோலி, 2-வது இன்னிங்சிலும் 90 ரன்களை கடந்ததும் பதற்றமானார். 93 ரன்னில் இருந்த போது ஆண்டர்சனின் பந்து வீச்சில்  ஜென்னிங்ஸ் விட்ட கேட்சால் தப்பினார். கோலி சதம் அடித்ததும் கேலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார். பதிலுக்கு அவரும் பிளையிங் கிஸ் கொடுத்தார்.

(கேட்ச் டிராப் ஆனதும் ஆண்டர்சன் ரியாக்‌ஷன்...)

அடுத்த சில நிமிடங்களிலேயே நேரத்தில் அவர் 103 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஒருரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி, 52 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ரஹானே 29 ரன்களிலும் (94 பந்து, 3 பவுண்டரி), முகமது ஷமி 3 ரன்னிலும் வெளியேறினர். இதையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ரஷித் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.