விளையாட்டு

55 பந்துகளில் 158 ரன்கள் - அரங்கத்தை அதிரவைத்த ஹர்திக் அதிரடி..!

webteam

டி.ஒய் படில் டி20 கோப்பைத் தொடரில் 55 பந்துகளில் 158 ரன்கள் விளாசி ஹர்திக் பாண்ட்யா மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் அனைத்து தரப்பு போட்டிகளிலும் அசத்தி வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகில் ஏற்பட்ட பிரச்னையால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகினார். இதைத்தொடர்ந்து முதுகில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த ஹர்திக், படிப்படியாக தனது உடலை தயார்படுத்தினார். கடுமையான உழைப்பால் மீண்டும் கட்டுமஸ்தான உடலை கொண்டு வந்தார்.

இந்நிலையில், டிஒய் படில் டி20 கோப்பை எனும் உள்ளூர் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ‘நான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன்’ என்பதை இந்திய அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த போட்டியில் 39 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த அதிரடி பேட்டிங் தொடர்பான பேச்சு ஓய்வதற்குள், அடுத்த அதிரடி ஆட்டத்தை அவர் காட்டியுள்ளார். நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் பிபிசில் என்ற அணிக்கு எதிராக 55 பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா 158 ரன்களை குவித்திருக்கிறார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 238 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் டூபே, ஐபிஎல் பிரபலம் சந்தீப் ஷர்மா ஆகியோரின் பந்துவீச்சுக்களையும் ஹர்திக் பதம் பார்த்துள்ளார். இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் இடம்பிடிப்பார் எனப்படுகிறது.