விளையாட்டு

திராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் புகார் நிராகரிப்பு

webteam

முன்னாள் வீரர் ராகுல் திராவிட் மீது இருந்த இரட்டை பதவி ஆதாயம் புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்திருந்தார். இந்த நோட்டீஸில் திராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வரும் போது எவ்வாறு இந்தியா சிமெண்ட்ஸில் துணை தலைவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஏனென்றால் இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. இதற்கு ராகுல் திராவிட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ராகுல் திராவிட் மீது இருந்த இந்த இரட்டைப் பதவி ஆதாய புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின், “ராகுல் திராவிட் மீது இருந்த இரட்டைப் பதவி ஆதாயம் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆகவே அவர் மீது இருந்தப் புகார் தற்போது நிராகாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.