விளையாட்டு

2 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை

webteam

ஒடிசாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு மற்றும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 54.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சக வீரர் கோபியின் சவாலை முறியடித்து லட்சுமணன் முதலிடம் பிடித்தார். 2 தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்த லட்சுமணன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இரட்டை தங்கம் வென்ற லட்சுமணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

இந்தப் போட்டியில், ஒரே நாளில் இந்தியாவுக்கு மொத்தம் 8 பதக்கம் கிடைத்துள்ளது. தங்கம் வென்ற லட்சுமணனுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 2013-ம் ஆண்டு உஹானில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் லட்சுமணன் வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.