ஐபிஎல் போட்டியில் என்னை இவ்வளவு கோடிக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் ஆண்ட்ரூ டை. பின்னர் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த இவரை, இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதுபற்றி டை கூறும்போது, ‘என்னை மூன்று, நான்கு கோடிக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று நினைத்தேன். இவ்வளவு கோடி கொடுத்து எடுப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. வியப்பாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பதால் அழுத்தம் இருக்குமா என்று கேட்கிறார்கள். அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக இருப்பேன் என்றுதான் என்னை எடுத்திருக்கிறார்கள். இதில் அழுத்தம் எதுவும் இல்லை. வழக்கமாக எப்படி விளையாடுவேனோ, அப்படியே இதிலும் விளையாடுவேன். பணம் பற்றி பிரச்னை இல்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் அணியின் வெற்றிதான் முக்கியம்’ என்றார்.
ஆண்ட்ரூ டை கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.