இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த சனிகிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனையடுத்து தோனிக்கு பிரபலங்கள் துவங்கி சாமானியர்கள் வரை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு இரண்டு பக்க வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
அதில் ‘கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை உங்களது அபாரமான ஆட்டத்தால் ஈர்த்து வந்தவர் நீங்கள். உங்களது டிரேட் மார்க் ஸ்டைலில் ஓய்வு முடிவை அறிவித்து உள்ளீர்கள். இந்தியாவுக்காக பல வெற்றிகளை தேடி தந்தவர் நீங்கள். உங்களது ஹேர் ஸ்டைல், ஆட்டம், அமைதியான நடைமுறை என அனைத்தும் எல்லோருக்கும் பிடிக்கும். உங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்’ என பிரதமர் மோடி அந்த இரண்டு பக்க வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் அனுப்பிய அந்த வாழ்த்து மடலை ட்விட்டரில் பகிர்ந்த தோனி ‘கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் போன்றவர்கள் எப்போதுமே விரும்புவது அவர்களது கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் மக்கள் எல்லோரிடமிருந்தும் கிடைக்கின்ற பாராட்டுகளை தான்.
என்னை வாழ்த்தியமைக்கும், பாராட்டியமைக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.