விளையாட்டு

CSK vs KKR: களத்தில் தளபதியாக செயல்பட்ட 'தல' தோனி

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தற்போது ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தி வருகிறார். இருந்தாலும் களத்தில் ஜடேஜாவுக்கு தளபதியாக ‘தல’ தோனி செயல்பட்டதை நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பார்க்க முடிந்தது. 

15-வது சீசனின் முதல் போட்டியில் 131 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தது சென்னை அணி. அந்த ரன்களை Defend செய்யும் நோக்கில் சென்னை அணி களத்தில் செயல்பட்டது. கொல்கத்தா பேட் செய்த தொடக்கத்தில் ஜடேஜா ஃபீல்ட் செட்டிங் மாதிரியானவற்றை தனது கட்டுப்பாட்டில் கவனித்து வந்தார்.பவர்பிளே வரை அந்த அணி விக்கெட்டை இழக்கவில்லை.

தொடர்ந்து வந்த டைம்-அவுட்டில் சென்னை அணியின் பயிற்சியாளருடன் தோனி பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன்பிறகு விக்கெட் கீப்பிங் பணியை கவனித்துக் கொண்டே ஃபீல்டர்களை செட் செய்யும் பணியை கவனித்தார் தோனி. அதோடு அவர் ஃபீல்டர்களுக்கு கொடுத்த கட்டளைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது. இதனை கேப்டன் ஜடேஜா கூலாக கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து தோனி விலகிய பிறகும் கேப்டன் கோலிக்கு உதவியாக அவர் ஃபீல்ட் செட் செய்வதில் உதவி வந்தார். 

இந்த போட்டியில் 25 பந்துகளுக்கு 15 ரன்களை எடுத்திருந்தார் தோனி. ஆனால் அடுத்த 15 பந்துகளில் 35 ரன்களை சேர்த்து அவர் மிரட்டினார்.