விளையாட்டு

அதிக ஒரு நாள் போட்டி: அசாருதீனை சமன் செய்தார் தோனி

அதிக ஒரு நாள் போட்டி: அசாருதீனை சமன் செய்தார் தோனி

webteam

அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரு தீனை, சமன் செய்தார் மகேந்திர சிங் தோனி.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது. 

இதில் முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்தது. ரோகித் சர்மா 87 ரன்களும் தவான் 66 ரன்களும் எடுத்தனர். 

இந்தப் போட்டியில் விளையாடிய தோனி, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களில், இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதினை சமன் செய்தார். அசாருதீன் 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய போட்டியுடன் தோனியும் 334 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், 463 போட்டிகளிலும் ராகுல் டிராவிட் 340 போட்டிகளிலும் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் உள்ள னர். இன்னும் ஆறு போட்டிகளில் விளையாடினால், ராகுல் டிராவிட்டையும் தோனி முந்துவார்.