விளையாட்டு

2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி

webteam

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா தகுதி பெற்றுள்ளார். 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கசகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் ஆடவருக்கான 86 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியா சார்பில் தீபக் புனியா கலந்து கொண்டார். இவர் இந்தப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். இதன்மூலம் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் இவர் தகுதிப் பெற்றுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இவர் சுவிட்சர்லாந்தின் ஸ்டேஃபன் ரெய்ச்முத்தை எதிர்த்து விளையாட உள்ளார். 
ஏற்கெனவே இந்த எடைப் பிரிவில் இவர் ஜூனியர் உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீபக் புனியா, “நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் மற்றும் இப்போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த இரண்டும் ஒன்றாக தற்போது நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.  சுஷில் குமார் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் எனக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் நான்காவது வீரர் இவர். ஏற்கெனவே வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி குமார் ஆகியோர் தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.