விளையாட்டு

சரவெடி வெடித்த பஞ்சாப்! பதிலடி காட்டி வெற்றியை வசப்படுத்திய டெல்லி!

JustinDurai

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, சரவெடியாய் வெடித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. 

196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணியின் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் வழக்கம்போல் டெல்லிக்கு அதிரடி தொடக்கத்தையே தந்தனர்.  தவானின் ரன் மழையால் டெல்லி அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான், 92 ரன்களில் (49 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஜய் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதற்கிடையே ஸ்டீவன் சுமித் 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்டும் (15 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. எனினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்களுடனும், லலித் யாதவ் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 2-வது தோல்வியாகும்.