விளையாட்டு

தோள்பட்டை காயம் - உலகக் கோப்பை தொடரில் இருந்து ஸ்டெயின் விலகல்

rajakannan

தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த தென்னாப்ரிக்க வீரர் டேல் ஸ்டெயின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்ரிக்க அணி தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணியுடன் மோதிய இரண்டாவது போட்டியிலும் தென்னாப்ரிக்காவுக்கு தோல்வியே கிடைத்தது. அடுத்தடுத்த தோல்வியால் தென்னாப்ரிக்கா அணி சோகத்தில் உள்ளது. மூன்றாவது போட்டியிலும் பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதுகிறது. 

இந்நிலையில், தென்னாப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயில் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். தோள் பட்டை காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை. 

ஸ்டெய்னுக்கு மாற்றாக தென்னாப்ரிக்க அணியில் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெகிடி, ரபாடா பந்துவீச்சு தென்னாப்ரிக்கா அணிக்கு பெரிதாக இதுவரை எடுபடவில்லை. நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டெயின் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளது அந்த அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.