விளையாட்டு

தோல்வியில் இருந்து குதிரைப்போல எழுவோம் - ஹர்பஜன் சிங்

webteam

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், தொடர்ந்து தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். 

 இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல சீசனாக  மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்பஜனை ஏலம் எடுத்தது. தன்னை சென்னை அணி ஏலம் எடுத்தது முதலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் தன்னுடைய கருத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார் ஹர்பஜன். இந்த நிலையில் நேற்று அவர் இதுவரை விளையாடி வந்த மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி களம் கண்டது. 3.5 ஓவர் வீசிய ஹர்பஜன் சிங் 20 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டும் சாய்த்தார். எனினும் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.

இதனை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தோல்வி குறித்து ஹர்பஜன் மீண்டும் தமிழில் பதிவிட்டார். அதில் “தோல்வி என்னும் அடி சறுக்கியது ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்க போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் . தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்” என அவர் கூறியுள்ளார்.