விளையாட்டு

"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே "- சிஎஸ்கே நிர்வாகம்

"முதல் போட்டியின் வருமானம் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கே "- சிஎஸ்கே நிர்வாகம்

webteam

சிஎஸ்கே அணியின் முதல் போட்டியின் வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளனர். இதனால் ஐபிஎல் திருவிழா நாடு முழுவது களைகட்ட உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. டிக்கெட் விற்பனை ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டன.

இதுகுறித்து அணியின் இயக்குநர் ராகேஷ் சிங், “சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் வரும் நிதி வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும். இதை ராணுவத்தில் கர்னல் பதிவியில் உள்ள எங்கள் அணியின் கேப்டன் தோனி வழங்குவார்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம்  இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து அதற்கு செல்வாகும் நிதியை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இந்தச் சூழலில் தற்போது சிஎஸ்கே அணி இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.