சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சாஹருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் யுஏஇ சென்றுள்ளன. அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு பவுலர் மற்றும் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆனால் யார் யார் ? கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் சிஎஸ்கே அணியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர், பந்துவீச்சாளரான தீபக் சாஹர் என தெரிவித்துள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடர் நெருங்கும் நிலையில் இந்த கொரோனா பாதிப்பு சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தற்போது கொரோனா வைரஸால் பாதிப்பால், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சக வீரர்களுக்கும் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தல் தொடரும் எனக் கூறப்படுகிறது. இதனால் பயிற்சியில் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.