கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நிபுணரான நௌமேன் நியாஸ் (Dr Nauman Niaz) என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, உங்களுக்கு 18 வயதாக இருக்கும்போது சூர்யவன்ஷி ஆடுவதுபோன்ற ஒரு ஆட்டத்தை ஆடமுடியாது என்றும், சூர்யவன்ஷியிடம் சக்தி வாய்ந்த ஆட்டத்தை விட நுட்பம்தான் அதிகம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், அவரின் ஆட்டம் அசாதாரணமானது என்றும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனைகளை நடத்துவது போல, சூர்யவன்ஷியின் பேட்டை ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுளர். அதோடு அவர் தனது பேட்டில் ஒரு செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதன் மூலமே இதுபோன்ற சக்திவாய்ந்த ஷாட்களை அவர் ஆடுகிறார் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், பேட்டில் எப்படி AI சிப் பொருத்தமுடியும், கிரிக்கெட் நிபுணருக்கு இது கூட தெரியாதா என்று சமூகவலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியர்களின் வீரம் குறித்து பொறாமை உள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூர்யவன்ஷியிடம் உங்கள் பேட்டில் ஏஐ சிப் இருக்கிறதா என்று கேட்டபோது, அதற்கு அவர், ஆமாம் அந்த சிப்பை கடவுள்தான் எனது பேட்டில் வைத்துள்ளார் என்றும், மேலிருந்தே அவர் உன் பேட்டில் எதையோ பொருத்திக் கொடுத்துள்ளேன் என்று அவர் கூறினார், அதைதான் பயன்படுத்தி வருகிறேன் என்றும் அவர் கிண்டலாக கூறியுள்ளார்.
தற்போது 15 வயதான சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்துவரும் நிலையில், அவர் அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.