சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து போட்டியில், நூர் அகமது அணியில் இல்லாததால் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கேப்டன் ரஷீத் கான் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னிலைப்படுத்தியதால், மைதானத்தின் தன்மையை தவறாக கணித்ததாக விமர்சிக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் பிப்ரவரி 7ஆம் தேதியான நேற்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியா அணிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் நேற்று 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றும் 3 போட்டிகள் நடக்கின்றன. இன்றைய முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 182 ரன்களை அடித்தபோதும் டிஃபண்ட் செய்ய முடியாமல் தோல்வியை தழுவியது. இத்தோல்விக்கு நூர் அகமது அணியில் இடம்பெறாததே காரணம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் குல்பதின் நைப்பின் 63 ரன்கள் ஆட்டத்தால் 182 ரன்கள் குவித்தது.
183 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணி, முஜிப் உர் ரஹ்மான் வீசிய 2வது ஓவரில் 14 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதற்கு பிறகு கம்பேக் கொடுத்த நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது. இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இப்போட்டியில் 3 ஸ்பின்னர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்த போதும் நூர் அகமது சேர்க்கப்படாதது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏன் நூர் அகமது இல்லை என்ற கேள்விக்கு நாங்கள் வேகப்பந்துவீச்சாளர்களை ஆட விரும்புகிறோம் என கேப்டன் ரஷீத் கான் தெரிவித்திருந்தார். ஆனால் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களை விட ஸ்பின்னர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஒருவேளை லெக் ஸ்பின்னர் நூர் அகமது இடம்பெற்றிருந்தால் ஆப்கானிஸ்தான் இந்தப்போட்டியை எளிதாக வென்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. நூர் அகமது சென்னையில் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் இன்னிங்ஸ் உட்பட 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை தவறாக கணித்ததா? அல்லது நூர் அகமது மீது நம்பிக்கையில்லாமல் இருந்ததா? என்பது புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும் ஆப்கானிஸ்தான் நல்ல அணியை கொண்டிருந்தும் இதுபோன்ற தவறுகளால் தான் பிளேஆஃப் வராமல் வெளியேறிவருகிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.