2025 மகளிர் உலகக் கோப்பையின் லீக் போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை எடுத்தபோதும், தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவலுக்கு ஐசிசி சார்பில் பதக்கம் வழங்கப்படாதது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்திய மகளிர் அணி, இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், அது, ஒருநாள் உலகக்கோப்பையை உச்சி முகர்ந்திருப்பதுதான். இதன்மூலம் 47 ஆண்டுகால ஏக்கம் தணிந்திருக்கிறது. எதிர்கால தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. ஒட்டுமொத்த மகளிர் அணிக்கும் பாராட்டுகளும், பரிசுத் தொகைகளும் குவிந்து வரும் நிலையில், அவ்வணியில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு வீராங்கனைக்கு மட்டும் பதக்கம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தவர் பிரதிகா ராவல். இவர், அணியில் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கி அணிக்கு பலம் சேர்த்தார். குறிப்பாக, ஏழு லீக் போட்டிகளில் விளையாடிய அவர், 308 ரன்கள் எடுத்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் எடுத்த 122 ரன்கள் இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கியது.
ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்பாராதவிதமாக அவர் காயம்பட்டதால், தொடரிலிருந்தே விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இதனால், உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளின் 15 பேர் கொண்ட குழுவில் பிரதிகா ராவல் பெயர் நீக்கப்பட்டு, ஷஃபாலி வர்மா பெயர் இடம்பெற்றது. இந்த நிலையில், 47 ஆண்டுகால கனவை நனவாக்கி, உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்திய நாயகிகள் ஒவ்வொருவருக்கும் ஐசிசி சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஐ.சி.சி விதிமுறைகளின்படி, போட்டியின் முடிவில் அதிகாரப்பூர்வ 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பிரதிகா ராவல் பெயர் இல்லாததால், அவருக்குப் பதக்கம் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் கடைசி நேரத்தில் இடம்பிடித்த ஷஃபாலி வர்மாவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ஆனால், இதுபோன்ற நிகழ்வு பிரதிகா ராவலுக்கு மட்டும் ஏற்படவில்லை. இதற்கு முன்பு, 2003 ஆண்கள் உலகக் கோப்பையின்போது இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி, நான்கு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும், காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு வெற்றியாளர் பதக்கம் கிடைக்கவில்லை.
மறுபுறம், பிரதிகா ராவலுக்கு பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணம், அவருடைய முகத்தில் மிகப்பெரிய புன்னகையைத் தந்தது. இந்திய மூவர்ணக் கொடியை பெருமையுடன் போர்த்தி சக்கர நாற்காலியில் வந்து, தனது அணியினருடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அப்போது பேசிய அவர், “இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் தோளில் இருக்கும் இந்தக் கொடி எல்லாவற்றையும் குறிக்கிறத. அணியுடன் இங்கே நிற்பது என்பது யதார்த்தமாக உணர்கிறது. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி, ஆனால் இந்த வெற்றிபெற்ற அணியின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த அணியை விரும்புகிறேன்" எனப் பெருமைபொங்க பேசினார்.
பதக்கம் பெறாத ராவலுக்கு, பதக்கங்களைப் பெற்ற தோழிகளே, பதக்கங்களாக மாறி பக்கபலமாக நின்றனர். இதுதானே உண்மையான பதக்கம். அந்தப் பதக்கத்தைத்தான் பிரதிகா ராவலும் விரும்பினார். அவருக்காக நாமும் ஒரு ராயல் சல்யூட் வைப்போம்.