வைபவ் சூர்யவன்ஷி web
கிரிக்கெட்

’சம்பவக்காரன் சூர்யவன்ஷி..’ 90 பந்தில் 190 ரன்கள் குவிப்பு.. இங்கிலாந்து செல்வதற்கு முன் ரன்வேட்டை!

14 வயதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சிறுவன் சூர்யவன்ஷி, 2025 ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே சதமடித்து பிரம்மிக்க வைத்தார். இந்த சூழலில் தற்போது பயிற்சி டெஸ்ட் போட்டி ஒன்றில் 90 பந்தில் 190 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார்.

Rishan Vengai

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே 14 வயதில் மிகவும் இளம் வயது வீரராக இடம்பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2025 ஐபிஎல் தொடரில் விளையாடினார். அறிமுக ஐபிஎல் தொடரிலேயே தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, 35 பந்தில் சதமடித்து சாதனை படைத்தார்.

அதுமட்டுமில்லாமல் 7 போட்டிகளில் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் அரைசதம் உதவியுடன் 242 ரன்கள் அடித்தார். அவரின் திறமையை பார்த்த பல ஜாம்பவான் வீரர்கள், பாராட்டு மழை பொழிந்தனர்.

இந்நிலையில் ஜுன் 27-ம் தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்தியா யு-19 அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். அதற்கு முன்னதாக பெங்களூரில் நடைபெற்ற பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடிய சூர்யவன்ஷி 90 பந்தில் 190 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார்.

90 பந்தில் 190 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷி..

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்தியா யு-19 ஆடவர் அணி, ஜுன் 27 முதல் ஜூலை 23 வரை 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கிறது. இதில் ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த ஆயுஸ் மாத்ரே கேப்டனாகவும், சூர்யவன்ஷி தொடக்க வீரராகவும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) நடந்த பயிற்சி போட்டியில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 90 பந்துகளில் 190 ரன்கள் அடித்து மிரட்டியுள்ளார். சூர்யவன்ஷி பேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

ரசிகர்கள் சூர்யவன்ஷிக்கு "அபாரமான திறமை" இருப்பதாகவும், அவர் "இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய விசயமாக மாறப்போகிறார்" என்றும் பாராட்டி வருகிறார்கள்.