இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2 மற்றும் 3ஆவது போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. தொடர்ந்து 4ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்தும், சமனுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. எனினும், இந்தப் போட்டியிலும் இந்திய அணி, தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்தது.
இந்த நிலையில், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் திறமை குறித்தும் பேசப்பட்டு வருகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அவர் இடம்பெற்றிருந்தபோதும், அயர்லாந்து தொடரில் அவர் களமிறக்கப்படவில்லை. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடக்கப் போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. இதனால், வைபவ் சூர்யவன்ஷியைக் களமிறக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்தன. இதற்கிடையே, மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சொதப்பியதும் விமர்சனமாக வைக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடரின் 2ஆவது போட்டியில், வைபவ் அறிமுகம் செய்யப்பட்டார். இங்கிலாந்து மண்ணில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். தனது அறிமுகப் போட்டியில் 14 ரன்கள், இரண்டாவது போட்டியில் 13 ரன்கள், மூன்றாவது போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை கண்டுபிடித்து அவரை வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், "வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டிற்குப் புதியவர் என்றாலும், அவரது ஐபிஎல் ஆட்டங்களை வைத்து அவரிடம் உள்ள தரவுகளை எங்களது குழுவினர் ஆராய்ந்தனர். அவர் எங்குத் தடுமாறுகிறார் என்பதை அறிந்து, அதற்கேற்பவே பந்துவீச்சுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அவரது திறமை குறித்துப் பேசிய இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, "வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும் விதத்தை நான் அவரது பலவீனமாகப் பார்க்கவில்லை. இதுபோன்ற பந்துகளை அவர் சிக்ஸராகப் பறக்கவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். தற்போதைய நிலையில் அவர் மிகவும் திறமையான வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை" எனக் கூறியிருக்கிறார்.