அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷி சீனியர் வீரர்களுக்கு கூல் டிரிங்ஸ் கொண்டுசென்ற விவகாரமும் அடுத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியுற்றதுடன் அயர்லாந்துக்கு எதிராகப் புதிய சாதனை படைத்தது. அதாவது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வடிவத்திலும் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகப் பதிவானது. இதை வல்லுநர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காததும் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் அந்தத் தொடரில் சீனியர் வீரர்களுக்கு கூல் டிரிங்ஸ் கொண்டுசென்ற விவகாரமும் அடுத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அவர், ”15 வயது சிறுவன் ஒருவன் மூத்த இந்திய வீரர்களுக்குப் பானங்களைக் கொண்டு செல்வதிலும், ஆடை மாற்றும் அறையில் மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறுவதிலும் என்ன தவறு இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “வெளியே அமர்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதிலும் ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் அணிக்கு சேவை செய்யட்டும், உதவட்டும், தண்ணீர்கூட கொண்டு வரட்டும். அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் முதலில் ஆடும் லெவனுக்கு வெளியே சிறிது காலம் செலவிட்டால், அவருக்குப் பரிவும், அணிச் சூழலைப் பற்றிய சிறந்த புரிதலும் கிடைக்கும். அவருக்கு முன்னால் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. வெளியே அமர்ந்திருப்பதும் ஒரு பங்குதான்” எனக் கூறியிருந்தார். இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின், “நாம் வைபவ் சூர்யவன்ஷிக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் ஐபிஎல்லில் விளையாடிய விதத்தைப் பார்த்தால், நிச்சயமாக நீங்கள் அவரை ஒருகட்டத்தில் விளையாட வைக்க வேண்டும். அவர் அந்த அளவுக்கு ஒரு சிறப்பான வீரர். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், தண்ணீர் சுமப்பது இழிவான செயல் அல்ல. தண்ணீர் சுமப்பது ஒரு தவறான விஷயம் என்று மக்கள் ஏன் நினைக்கிறார்கள்? கிரிக்கெட்டின் நெறிமுறைகள் எப்போது மாறின? 1990-களிலும் 2000-களிலும் நான் சென்னையில் பந்து பொறுக்கியாக இருந்தேன், அப்போது கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மைதானத்திற்குள் ஓடிச் சென்று இந்திய வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில் கொடுப்பது எப்போது குறையத் தொடங்கியிருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.