IND A Vs SL A எக்ஸ் தளம்
கிரிக்கெட்

IND A Vs SL A | தலைக்கு மீதேறிய கோபம்.. இலங்கை வீரரை தள்ளிவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. நடந்தது என்ன?

மத்துலனின் கொண்டாட்டத்தினாலோ அல்லது ஆட்டம் முடிந்த பிறகு தன்னிடம் கூறப்பட்ட ஏதோ ஒன்றாலோ அந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Prakash J

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அவ்வணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 4ஆவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணியும் போராடி 9 விக்கெட் இழப்புக்கு ஆட்டத்தை டிரா செய்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி தோல்வியடைந்த உடனேயே, வைபவ் சூர்யவன்ஷி தனது நிதானத்தை இழந்து இலங்கை 'ஏ' அணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சூப்பர் ஓவரில் குகதாஸ் மத்துலன், சூர்யவன்ஷிக்கு கடைசிப் பந்தை யார்க்கராக வீசினார். இதனால் 8 ரன்கள் எடுக்க வேண்டிய இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கையை விட்டு நழுவியது. இந்தக் கொண்டாட்டத்தை தனது சகவீரர்களுடன் குகதாஸும் கொண்டாடினார். அப்போது சூர்யவன்ஷி, இலங்கை வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தவிர, இலங்கை நட்சத்திர வீரர்களில் ஒருவரையும் தள்ளிவிட்டார்.

இதற்கிடையே சமாதானப்படுத்த முயன்ற நிரோஷன் டிக்கெவெல்லாவையும், சூர்யவன்ஷியைப் பிரித்து வைத்தார். பின்னர் ஆட்டம் முடிந்தும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கத் தொடங்கியபோதும், சூர்யவன்ஷி மகிழ்ச்சியாக இல்லை. அவர் பெவிலியனுக்குத் திரும்பிச் சென்றபோது, ​​அவரது சக வீரர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர். சூர்யவன்ஷியின் இந்தக் கோபத்திற்குச் சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், மத்துலனின் கொண்டாட்டத்தினாலோ அல்லது ஆட்டம் முடிந்த பிறகு தன்னிடம் கூறப்பட்ட ஏதோ ஒன்றாலோ அந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தவிர, சூப்பர் ஓவருக்கு முன்னதாக வெளிச்சமின்மை குறித்தும் பின்னர் சூப்பர் ஓவரில், இந்தியா வீசிய ஓவரின்போது வீசப்பட்ட நோ-பால் குறித்தும் இலங்கை அணியினருடன் வைப்வ தொடர்ந்து வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. சூர்யவன்ஷி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிரணி வீரருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல . கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின்போது, ​​ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் அலி ராசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.