U-19 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெற இந்தியா-பாகிஸ்தான் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு எளிதாக தகுதிபெறும். பாகிஸ்தான் தகுதிபெற NRR அடிப்படையில் இந்தியாவை நிர்ணயிக்கப்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுள்ளன.
ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U-19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன.
இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சூப்பர் 6 குரூப் 1-ல் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் யு19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்நிலையில் சூப்பர் 6 குரூப் 2-ல் முதலிடம் பிடித்த இங்கிலாந்து யு19 அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 4வது அரையிறுதி அணி யார் என்ற இடத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலையில் சூப்பர் 6-க்கான குரூப் 2 பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 3வது இடத்திலும் நீடிக்கின்றன.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் எளிதாக அரையிறுதிக்கு தகுதிபெறும். பாகிஸ்தான் அணி தகுதிபெற வேண்டுமானால் NRR அடிப்படையில் தகுதிபெற, இந்தியாவை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். மேலும் சேஸிங்கில் அதிவேகமாக இலக்கை எட்ட வேண்டும். உதாரணத்திற்கு 251 ரன்களை எட்டவேண்டுமானால் 29.4 ஓவரில் அடிக்க வேண்டும்.
அரையிறுதிக்கு யார் தகுதியாவார்கள் என்ற முக்கியமான போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதுவதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடந்துமுடிந்த யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.